சென்னை: விழுப்புரம் மாவட்டம் அன்பு ஜோதி ஆசிரமம் தொடர்பான 4 வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து ஜபருல்லா உள்ளிட்ட 15 பேர் காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கில் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் புலன்விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலிசார் அன்பு ஜோதி இல்ல உரிமையாளர் ஜோபின் பேபி, மனைவி மரியா மற்றும் 6 ஊழியர்கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; விழுப்புரம் மாவட்டம், குண்டலபுலியூரில் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜபருல்லா (70) என்பவர் உட்பட 15 நபர்கள் ஆசிரமத்தில் காணாமல் போனது தொடர்பாக விழுப்புரம் கெடார் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, கல்கத்தாவைச் சேர்ந்த ரிபானா (30) என்பவர் தன்னை ஆசிரமத்தில் அடைத்து வைத்து, சித்திரவதை செய்து, நிர்வாகி ஜீபின்பேபி பாலியல் வன்புணர்ச்சி செய்ததாகப் புகாரின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமியம்மாள் (80) மற்றும் முத்துவிநாயகம் (48) ஆகியோர் இதே ஆசிரமத்தில் இருந்து காணாமல் போனதாக பெறப்பட்ட புகாரின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு,
அதேபோல, அனுமதி பெறாமல் ஜீபின்பேபி மற்றும் அவரது மனைவி மரியா விழுப்புரம் மாவட்டம் சின்னமுதலியார்சாவடி என்ற இடத்தில் கடந்த மூன்று மாதங்களாக ஆசிரமம் நடத்தி வந்தது தொடர்பான வழக்கு ஆகிய இந்த நான்கு வழக்குகள் குறித்து பல்வேறு மாநிலங்களில் புலன் விசாரணை செய்யப்பட வேண்டியுள்ளதால் இவ்வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு, உத்தரவிட்டுள்ளார்கள். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
