சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி; தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய நிலையில் தலித் மற்றும் வன்னியர் சமுதாயங்கள் உள்ளன. வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு சம்பந்தமாக முதலமைச்சரை சந்தித்து பேசினேன். வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு எந்த சமுதாயத்திற்கும் எதிரானது கிடையாது. தரவுகள் இல்லை என்று உச்சநீதிமன்றம் 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது.
இந்த கல்வியாண்டில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் கொண்டு வர வேண்டுமென முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தி உள்ளோம். இந்த விவகாரத்தில் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்று முதல்வரை சந்தித்து வலியுறுத்தி உள்ளோம். நீர் மேலாண்மை பிரச்சனைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளோம். தருமபுரி மாவட்டத்திற்கான காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அரியலூர் சோழர் பாசன திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தினோம்.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்க எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். சாதி வாரியான கணக்கெடுப்பு என்பது நீண்ட கால செயல்பாடு, இருந்தாலும் இந்த 2 மாதத்திற்குள்ளாக நீதிமன்றம் தெரிவித்த தரவுகளை சேகரித்து மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படாத அளவிற்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அரசை வலியுறுத்தி உள்ளோம். முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் எந்த வகையிலான அரசியலும் பேசவில்லை இவ்வாறு கூறினார்.