பெங்களூரு: பெங்களூரு அணியின் கேப்டனாக ஸ்ம்ரிதி மந்தனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் டி20 தொடரை போல, மகளிருக்கான டி20 தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்த ஆண்டு அறிமுகம் செய்கிறது. மார்ச் 4 - 26 வரை நடைபெற உள்ள இந்த தொடரின் முதலாவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜயன்ட்ஸ், உ.பி.வாரியர்ஸ் என 5 அணிகள் களமிறங்க உள்ளன. இந்த 5 அணிகளுக்கான வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான ஏலம் மும்பையில் உள்ள ஜியோ சர்வதேச அரங்கில் நேற்று நடைபெற்றது.
மொத்தம் 409 பேர் அடங்கிய பட்டியலில் இருந்து 90 வீராங்கனைகளை ஏலம் எடுக்க 5 அணிகளும் போட்டி போட்டன. ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ரூ.12 கோடி செலவு செய்ய அனுமதிக்கப்பட்டது. இந்திய அணி துணை கேப்டனும் அதிரடி தொடக்க வீராங்கனையுமான ஸ்மிரிதி மந்தனாவை, கடும் போட்டிக்கிடையே ஆர்சிபி அணி ரூ.3.40 கோடிக்கு வாங்கியது. டபுள்யு.பி.எல். தொடரின் முதல் ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு வாங்கப்பட்ட வீராங்கனை என்ற பெருமையை மந்தனா தட்டிச் சென்றார். மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டனாக இந்திய வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.