புதுடெல்லி: செலவை குறைக்கும் நடவடிக்கையாக டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் உள்ள டிவிட்டர் அலுவலகங்களை மூட அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஸ்க் உத்தரவிட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய பணக்காரரும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகியவற்றின் நிறுவனரான எலன் மஸ்க், கடந்த 2022ம் ஆண்டு 44 ஆயிரம் கோடி டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 3.64 லட்சம் கோடி ரூபாய்) சமூக வலைதள நிறுவனமான டிவிட்டரை வாங்கினார்.
டிவிட்டர் நிறுவனத்தை மஸ்க் கையகப்படுத்திய பிறகு, அதன் தலைமை செயல் அதிகாரியாக இருந்த இந்தியர் பரக் அகர்வால், சட்டப்பிரிவு தலைமை அதிகாரி, நிதித்துறை அதிகாரி உள்ளிட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து சிறந்த பணியாளர்களாக அங்கீகரிக்கப்பட்ட 2,300 தொழில்நுட்ப பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட 7 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். சிலர் தாங்களாகவே பணியில் இருந்து சென்று விட்டனர்.
இந்நிலையில், செலவை குறைக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் உள்ள டிவிட்டர் அலுவலகங்களை மூட உத்தரவிட்டுள்ள எலன் மஸ்க், அங்கிருந்த பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்றவும் அறிவுறுத்தியுள்ளார். பெங்களூருவில் உள்ள டிவிட்டர் அலுவலகம் மட்டும் தொடர்ந்து இயங்குகிறது.