சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வசதி பெற காலதாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில் பணி நிறைவு சான்று பெறாத 12 மீட்டர் உயரம் வரை உள்ள மூன்று குடியிருப்புகள் அல்லது 750 சதுரமீட்டர் பரப்பளவிலான வீடுகள் மற்றும் அனைத்து தொழிற்சாலை கட்டிடங்கள் மின் இணைப்பு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட விதிகள் 2019 விதி எண் 20படி 12 மீட்டர் வரை உயரம் உள்ள 3 குடியிருப்புகள் அல்லது 750 சதுர மீட்டர் பரப்பளவிற்கு உட்பட்ட அனைத்து வீடுகள் மற்றும் அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கு கட்டிட முடிவு சான்று இல்லாமல் மின் இணைப்பு வசதி, குடிநீர் குழாய் வசதி மற்றும் பாதாள சாக்கடை வசதி முதலான இணைப்புகள் வழங்கலாம்.
நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் கட்டிடம் கட்டி முடிவு பெற்ற பின் மின் இணைப்பு வசதி பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாகமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்ற வண்ணம் உள்ளது. எனவே, மேற்படி நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் முடிவு பெற்ற கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வசதி வழங்க ஏதுவாக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு நகராட்சி நிர்வாக ஆணையரால் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்படுகிறது.