புழல்: புழல் மத்திய சிறையின் பெண் கைதிகள் அறைகளில் நேற்று முன்தினம் இரவு, பெண் சிறைக் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெண் கைதி தனியே செல்போனில் பேசிக்கொண்டிருப்பதை கண்டனர். விசாரணையில், கொடுங்கையூரில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட தாரணி என்பதும், இவர் கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 22ம் தேதி முதல் விசாரணை கைதியாக இருப்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து ஒரு செல்போன், சார்ஜர், பேட்டரி போன்றவற்றை சிறை காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதேபோல் காஞ்சிபுரத்தை சேர்ந்த பரத், விஷ்வா (எ) விஸ்வநாதன் என்பவரிடம் இருந்தும் செல்போன், பேட்டரி, சிம்கார்டு, சார்ஜர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கூடுதல் சிறை கண்காணிப்பாளர் தர்மராஜ், துணை சிறை அலுவலர் வசந்தி ஆகியோர் அளித்த புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.