அலங்காநல்லூர்: மதுரை அருகே, பாலமேட்டில் நேற்று நள்ளிரவில் நடந்த தீ விபத்தில் 5 கடைகள் நாசமாகின. இதில், ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமாகின. மதுரை மாவட்டம், பாலமேட்டில் பெரியகடை வீதியில் உள்ள 5 கடைகளில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீவித்து காரணமாக அவைகள் முழுவதும் தீப்பற்றி எரிந்தன. இதில், ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. இந்த தீவிபத்தில் பஞ்சு என்பவருக்கு சொந்தமான மாட்டுத்தீவனம் மற்றும் அரிசி உள்ளிட்ட வியாபாரக் கடையும் கணேசன் என்பவரது காய்கறி கடை சுப்பிரமணி, சிவக்குமார் ஆகியோர்களின் பல சரக்கு கடைகளும், தீ விபத்தில் முற்றிலும் எரிந்து நாசமாகி உள்ளது.
நள்ளிரவில் இந்த பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக கடைகள் அனைத்தும் முற்றிலும் சேதமானதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து பாலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தீவிபத்தில் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களிடம் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்து உள்ளார்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மதுரை வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் எம்.ஆர்.எம் பாலசுப்பிரமணியம், பாலமேடு பேரூராட்சி தலைவர் சுமதி பாண்டியராஜன், துணைத்தலைவர் ராமராஜ் மற்றும் வைரமணி, சேகர் உள்ளிட்ட கிராம முக்கியஸ்தர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும், வாடிப்பட்டி வட்டாட்சியர் வீரபத்திரன், பாலமேடுபேரூராட்சி செயல் அலுவலர் தேவி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அரசு நிவாரண உதவிகள் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.