×

மகா சிவராத்திரியையொட்டி குமரியில் சிவாலய ஓட்டம் தொடங்கியது: 12 கோயிலில் பக்தர்கள் தரிசனம்

நாகர்கோவில்: மகா சிவராத்திரியையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் முஞ்சிறை திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து சிவ பக்தர்கள் கோபாலா கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் சிவாலய ஓட்டத்தை இன்று காலை தொடங்கினர் இந்த ஓட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு, கல்குளம் தாலுகா பகுதிகளில் தொன்மையும் வரலாற்று சிறப்பும் வாய்ந்த 12 சிவ தலங்கள் அமைந்து உள்ளன. இந்த சிவாலயங்களில் சைவ வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மகா சிவராத்திரியையொட்டி சிவாலய ஓட்டம் நடக்கிறது.

நாட்டிலேயே குமரி மாவட்டத்தில் மட்டும் தான் 12 சிவாலயங்களையும் ஓடி தரிசிக்கும் சிவாலய ஓட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் ஒரு வாரம் முன்பு மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள். தினமும் சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் செய்து வருவார்கள். இந்த விரதத்தின் போது தீயினால் சுட்ட பொருட்களை சாப்பிடமாட்டார்கள். நுங்கு, இளநீர், பழங்கள் போன்ற பொருள்களைத்தான் சாப்பிடுவார்கள். சிவாலய ஓட்டத்தில் பங்கேற்க கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதி, கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று ஏராளமான பக்தர்கள் முஞ்சிறை திருமலை மகாதேவர் கோயிலுக்கு வர தொடங்கி உள்ளனர்.

ராமாயணம் மகாபாரதம் காவியத்தோடு தொடர்புடைய திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து இன்று காலை சிவ பக்தர்களின் ஓட்டம் தொடங்கியது. நேரம் ஆகஆக பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. இந்த பக்தர்கள் விசிறி விபூதி பொட்டலத்துடன், முஞ்சிறையில் இருந்து காப்புக்காடு, சென்னித்தோட்டம், பல்லன்விளை, மார்த்தாண்டம் வழியாக திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்கு சென்று தரிசித்தனர். திக்குறிச்சியில் இருந்து கிழக்கு நோக்கி அருமனை களியல் வழியாக 14 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திற்பரப்பு வீரபத்திரர் கோயிலையும், அங்கிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருநந்திக்கரை கோயிலையும், அங்கிருந்து குலசேகரம் வழியாக 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பொன்மனைமகாதேவர் கோயிலையும், 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பன்னிப்பாகம் கோயிலையும் தரிசிப்பார்கள்.

இந்த கோயிலில் இருந்து கிழக்காக 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கல்குளம் நீலகண்டசுவாமியை தரிசித்து அங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மேலாங்கோடு கோயிலுக்கு சென்று வழிபடுவார்கள். பின்னர் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருவிடைக்கோடு சடையப்பர் கோயிலில் தரிசிப்பர். அங்கிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவிதாங்கோடு கோயிலிலும் தரிசனம் செய்வார்கள். பின்னர் அமராவதி கோழிப்போர்விளை வழியாக 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருப்பன்றிகோடு மகாதேவர் கோயிலில் தரிசித்துவிட்டு, பள்ளியாடி வழியாக 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருநட்டாலம்சங்கரநாராயணர் கோயில் ஓடியே சென்று பக்தர்கள் தரிசிக்கின்றனர்.

சுமார் 110 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்து உள்ள இந்த பன்னிரு சிவாலயங்களையும் பக்தர்கள் ஓடி தரிசிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படி ஓடி தரிசிக்கும் பக்தர்களுக்கு வழி நெடுகிலும் பொதுமக்கள் சார்பில் சுக்கு நீர், கடலை, பானகம், மோர், கஞ்சி, பழம் போன்ற உணவு பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிது. இன்று முதல் நாளை வரை இந்த 12 சிவாலயங்களையும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று தரிசிப்பார்கள். இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்கள் விழாக்கோலம் பூண்டு உள்ளது.


Tags : Shivalaya ,Kumari , Shivalaya run begins in Kumari on Maha Shivratri: Devotees visit 12 temples
× RELATED குமரி கடலில் குளிக்க 4-வது நாளாக தடை நீடிப்பு..!!