சென்னை: வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் அரசு விரைவுப்பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க வேண்டும் என போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அனைத்து கிளை மேலாளர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து ஊர்களில் இருந்தும் சென்னை வரும் பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி, வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் அரசு விரைவு பேருந்துகள் தாம்பரம் மாநகர பேருந்து நிறுத்தம் அருகே இடதுபுறமாக நின்று பயணிகளை இறக்கிவிடலாம்.
இதன் மூலம், தாம்பரம், குரோம்பேட்டை மற்றும் வடபழனி செல்லும் பயணிகள் பயனடைவார்கள். மேலும், அரசு போக்குவரத்து கழகத்திற்கான வருவாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல், மாலை 5 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக சென்னைக்கு வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இயக்கப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.