×

மாமல்லபுரம் அருகே நள்ளிரவில் பயங்கரம்: தனியாக வசித்த வயதான தம்பதி கழுத்து அறுத்து படுகொலை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே கழுத்து அறுத்து வயதான தம்பதியை படுகொலை செய்துவிட்டு 10 பவுன் நகைகளுடன் மர்ம நபர்கள் தப்பி ஓடினர். நள்ளிரவில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிராமத்தில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான முந்திரி தோப்பு உள்ளது. இந்த முந்திரி தோப்பில் உள்ள இடங்களை வாடகைக்கு விட்டு, அதில் வீடு கட்டி தங்கி கொள்ள பொதுமக்களுக்கு அறக்கட்டளையை சேர்ந்த நிர்வாகிகள் அனுமதி வழங்கியுள்ளனர். அந்த வகையில் நெம்மேலியை சேர்ந்த சகாதேவன் (85), இந்த தோப்பில் குடிசை வீடு கட்டி வாடகைக்கு வசித்து வந்தார். இவரது மனைவி ஜானகி (80).

இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. அதனால் சகாதேவனும், ஜானகியும் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்றிரவு வழக்கம் போல இருவரும் சாப்பிட்டு விட்டு சற்று ஓய்வு எடுத்தனர். பின்னர், காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கினர். நள்ளிரவில் மர்ம நபர்கள், சகாதேவன் வீட்டிற்கு திபுதிபுவென வந்தனர். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த சகாதேவனையும், ஜானகியையும் எழுப்பினர். இதில், சகாதேவன் திடுக்கிட்டு எழுந்தார். மர்ம நபர்களை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், ‘சத்தம் போட்டால் கொன்று விடுவோம்’ என்று கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இருப்பினும் சகாதேவன் கூச்சலிட்டுள்ளார்.

அதனால் மர்ம நபர்கள், சகாதேவனை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு ஜானகி எழுந்தார். மர்ம நபர்களுடன் கணவர் சகாதேவன், போராடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அந்த மர்ம நபர்களை தடுத்த முயன்றார் ஜானகி. அவரையும் சரமாரியாக தாக்கி கத்தியால் கழுத்தை அறுத்தனர். ரத்தம் கொட்டியது. அந்த நேரத்தில், அவரது கழுத்தில் கிடந்த தங்க தாலி ஜெயின், மூக்குத்தி, மோதிரம் உள்ளிட்ட 10 பவுன் நகைகளை பறித்து கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இந்த சம்பவத்தில் சகாதேவனும், ஜானகியும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர்.

காலையில் அக்கம் பக்கத்தினர் அவ்வழியாக வந்தனர். அப்போதுதான் இருவரும் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தம்பதியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் தலைமையில் 3 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள், கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Mamallapuram , Midnight horror near Mamallapuram: An elderly couple who lived alone was hacked to death
× RELATED கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன்...