தஞ்சாவூர்: தமிழ்நாடு முழுவதும் அனைத்து சிவன் கோயில்களிலும் சிவராத்திரி விழா நாளை (18ம் தேதி) மிக விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் நாளை மாலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 6 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இது குறித்து தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா கூறுகையில், சிவராத்திரி விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே உள்ள திலகர் கடலில் மேடை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு 2000 முதல் 3000 பேர் அமர்வதற்கான இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விழாவுக்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக சிவகங்கை பூங்கா அருகிலும் மற்றும் கோயில் எதிரே உள்ள வாகனம் இருக்கும் இடத்தில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். மேலும், மேடை அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஆன்மீக புத்தகம் ,பிரசாதங்கள் ,உணவு மற்றும் தின்பண்டங்கள் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் தேவைக்கு ஏற்ப தற்காலிக கழிவறைகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மாலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 6 மணி வரை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.