மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மும்பை ஓஷிவாராவில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு நேற்று தனது நண்பருடன் சாப்பிடச் சென்றார். அப்போது இரண்டு ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க விரும்பினர். பிருத்வி ஷா அனுமதியின் பேரில் சில புகைப்படங்கள் எடுத்த அவர்கள், தொடர்ந்து மேலும் படங்கள் எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, மறுப்பு தெரிவித்த பிருத்வி ஷா, தனது நண்பர் மற்றும் ஓட்டல் மேலாளரை அழைத்து ரசிகர்களை வெளியேற்றும்படி கூறி உள்ளார்.
இதனால் ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் பிருத்வி ஷா நண்பருடன் வெளியே வந்தபோது அவரை சிலர் பேஸ்பால் மட்டைகளுடன் ஆயுதம் ஏந்தியபடி தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. அவரது காரையும் பேஸ்பால் மட்டையால் தாக்கி சேதப்படுத்தி உள்ளனர். இதனால் பிருத்வி ஷா வேறு காரில் ஏறி சென்றுள்ளார். ஆனால், அந்த காரை வாகனங்களில் துரத்தி வந்து சிலர் தாக்கியதாகவும், ரூ. 50 ஆயிரம் பணம் கேட்டதாகவும் பிருத்வி ஷாவின் நண்பர் புகார் அளித்தார்.
அதன்பேரில் சப்னா கில் என்ற பெண் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட சப்னா கில் கைது செய்யப்பட்டார். கிரிக்கெட் வீரர் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை எதிர்தரப்பினர் மறுத்துள்ளனர். பிருத்வி ஷா முதலில் தங்களை தாக்கியதாக அவர்கள் கூறி உள்ளனர்.