காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா நேற்று தொடங்கியது. திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி விழா நடத்தப்பட்டு வருகிறது. 18வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நேற்று மாலை தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இவ்விழாவை காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
நாள்தோறும் மாலை 6 மணியளவில் தொடங்கும் நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த புகழ்பெற்ற நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று நடனமாடுகின்றனர். மோகினியாட்டம், ஒடிசி உள்ளிட்ட பல்வேறு நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் 18ம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு அன்று இரவு முதல் மறுநாள் காலை வரை தொடர்ச்சியாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் நாட்டின் புகழ் பெற்ற நடன கலைஞர்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.