×

ரூ.15,000 லஞ்சம் வாங்கிய தாசில்தார், டிரைவர் கைது: சஸ்பெண்ட் செய்தார் டிஆர்ஓ

ஆற்காடு: ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்ற ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக தாசில்தார் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுகா  செய்யானந்தலை சேர்ந்தவர் சகாதேவன்(43), விவசாயி. இவரது தாத்தாவின் பூர்வீக சொத்து 51 சென்ட்  ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த மாங்காடு கிராமத்தில் உள்ளது. அவர் மனு செய்ததையடுத்து கடந்த மாதம் 20ம் தேதி, அப்போதைய கலெக்டர் பாஸ்கர பாண்டியன், பட்டா பெயர் மாற்றி தர உத்தரவிட்டார். இதுதொடர்பாக கடந்த 7ம் தேதி தாசில்தார் சுரேஷ் (43) அந்த நிலத்தை ஆய்வு செய்ய சென்றார்.

அப்போது சகாதேவனிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டு, கடைசியாக ரூ.15,000 தருமாறு பேரம் பேசியுள்ளார். இதுகுறித்து சகாதேவன் ராணிப்பேட்டை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். பின்னர் நேற்று முன்தினம் மாலை ஆற்காடு தாலுகா அலுவலகம் வந்து தாசில்தார் சுரேஷிடம் ரூ.15 ஆயிரத்தை கொடுத்தார். அதை அவரது ஜீப் டிரைவர் பார்த்திபன் (49) பெற்று தாசில்தாரிடம் வழங்கும்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கைது செய்தனர். இதுபற்றி தாசில்தாரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். பின்னர் இருவரையும் நேற்று காலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். இதையடுத்து தாசில்தார் சுரேஷை சஸ்பெண்ட் செய்து டிஆர்ஓ மீனாட்சி சுந்தரம் உத்தரவிட்டார்.


Tags : Dasildar , 15,000 bribe, tahsildar, driver arrested, suspended, TRO
× RELATED தேர்தல் பறக்கும் படை சோதனை:...