சென்னை: முறையாக கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததாக ஆதித்யராம் குழுமம், அசோக் ரெசிடென்சி, அம்பாலால் குரூப், கே.கே.எம். கல்குவாரி நிறுவனம் என 4 நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக, விடிய விடிய சோதனை நடந்தது. இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், அதன் உரிமையாளர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை கிழக்கு கடற்கரை சாலை பனையூரை தலைமையிடமாக ெகாண்டு ஆதித்யராம் குழுமம், சென்னை அசோக் ரெசிடென்சி நிறுவனம், வேலூர் அம்பாலால் குழுமம், நெல்லை கே.கே.எம் நிறுவனங்கள் பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறது. இந்த 4 நிறுவனங்களும் 2021-22ம் ஆண்டிற்கான வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டியதில், பல கோடி ரூபாய் வருவாய் மறைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதைதொடர்ந்து, இந்த 4 நிறுவனங்களிலும், வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் நேற்று முன்தினம் சோதனையை துவக்கினர்.
இந்நிலையில், 2வது நாளாக நேற்றும் சோதனை தொடர்ந்தது. ஆதித்யராம் குழுமத்துக்கு சொந்தமான பனையூரில் உள்ள தலைமை அலுவலகம், கேளம்பாக்கம் ராஜன் நகரில் உள்ள அலுவலகம், புதுப்பாக்கம் பகுதியில் உள்ள அலுவலகம், காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள அலுவலகம், உரிமையாளர் வீடுகளில் 2வது நாளாக சோதனை நடந்தது. அதேபோல், வேலூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அம்பாலால் குழுமங்களிலும் 2வது நாளாக சோதனை நடந்தது. நெல்லையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கே.கே.எம் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேந்திரன் வீடு, கல்குவாரிகள், செங்கல் சூளை மற்றும் கே.கே.எம் தலைமை அலுவலகத்திலும் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
4 நிறுவனங்களுக்கு சொந்தமான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நெல்லை மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் என மொத்தம் 60 இடங்களில் நேற்று முன்தினம் சோதனை நடந்தது. அதில் சில இடங்களில் மட்டும் நேற்று முன்தினம் நள்ளிரவு சோதனை முடிந்தது. ஆனால், தலைமை அலுவலகங்கள், உரிமையாளர்கள் வீடுகள், ரியல் எஸ்டேட் அலுவலகம், நட்சத்திர ஓட்டல்கள், கட்டுமான நிறுவன அலுவலகங்கள் மற்றும் நிறுவன பங்குதாரர்கள் வீடுகளில் என மொத்தம் 45 இடங்களில் நேற்றும் சோதனை நடந்தது.
முதல் நாள் சோதனையில் 4 நிறுவனங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சம்பந்தப்பட்ட 4 நிறுவனங்கள் சார்பில் சமர்ப்பித்த ஆவணங்களை ஒப்பிட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வெளிநாட்டு முதலீடுகள், பங்கு விற்பனை குறித்து ஆவணங்களை முறையாக கணக்காய்வு செய்யப்பட்டு வருகிறது. சோதனை நடந்து வரும் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ரொக்க பணம், தங்க நகைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணை முடிவிற்கு பிறகு தான் ஒவ்வொரு நிறுவனமும் எத்தனை கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளனர்.