சென்னை: சுங்குவார்சத்திரம் அருகே சென்னை மற்றும் புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் திருடப்பட்ட 133 உயர்ரக செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆந்திராவை சேர்ந்த 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணரெட்டி. இவரது, மகன் ஹரிகாந்த் (24). இவர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே தனது ரூ.1 லட்சம் மதிப்பிலான ஆப்பிள் போன் காணவில்லை என சென்னை சென்ட்ரல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார், சென்னை சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, சைபர் கிரைம் போலீசார் ஆப்பிள் போனில் உள்ள ஜிபிஎஸ் மற்றும் ஐஎம்இஐ எண்களை வைத்து தேடி வந்தனர். இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே ஆப்பிள் போனின் ஜிபிஎஸ் சிக்னல் கிடைத்ததால், சைபர் கிரைம் போலீசார், காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, சுங்குவார்சத்திரம் சந்திப்பு அருகே தனியார் ஹோட்டலில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நபர்கள் தங்கி இருந்த அறையில் ஜிபிஎஸ் சிக்னல் கிடைத்ததின்பேரில், போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், செகண்ட் மண்பேட் மற்றும் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபு, பவன், கிருஷ்ணா, பிரேம்குமார், சதிஷ் ஆகிய 5 பேரும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உயர்ரக செல்போன்களை திருடி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவர்களிடமிருந்து ஆப்பிள் உள்ளிட்ட 133 உயர்ரக செல்போன்கள் மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தி வந்த கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், போலீசார் இச்சம்பவம் குறித்து 5 பேரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.