×

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பாலங்கள் அழகுபடுத்தும் பணி மார்ச் இறுதியில் முடிவடையும்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மண்டலத்துக்குட்பட்ட பாலங்கள் அழகுபடுத்தும் பணி மார்ச் இறுதியில் முடிவடையும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.  சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் 14 மேம்பாலங்கள் மற்றும் 12 ரயில்வே மேம்பாலங்கள் என 26 முக்கியப் பாலங்கள், 16 வாகனச் சுரங்கப்பாதைகள், 5 பாதசாரிகள் சுரங்கப்பாதைகள், 4 நடைமேம்பாலங்கள் மற்றும் 234 சிறுபாலங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதல்வர் உத்தரவின் படி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், ‘‘சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது, சென்னை மாநகரை அழகுப்படுத்தும் வகையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.25 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சியில் மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியில் செயற்கை நீரூற்று மற்றும் வண்ண விளக்குகள் அமைத்து, பசுமையாக்கி அழகுபடுத்தும் பணி செயல்படுத்தப்படும்’’ என அறிவித்தார்கள்.

அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை அழகுப்படுத்தும் வகையில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றி, கண்கவரும் வகையில் வண்ண ஓவியங்கள் வரைதல், பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், சாலைகளின் மையத் தடுப்புகளில் செடிகள் நடுதல், மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியில் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட எம்.ஆர்.டி.எஸ். பாலத்தின் கீழ் பகுதியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் செடிகள் நடுதல், பசுமைப் புல்வெளிகள் அமைத்தல், வண்ண ஓவியங்கள் வரைதல், செயற்கை நீரூற்று அமைத்தல் போன்ற அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அடையாறு மண்டலம், வார்டு-176, வீராங்கல் ஓடை அருகில் எம்.ஆர்.டி.எஸ். பாலத்தின் கீழ் பகுதியில் சிங்கார சென்னை 2.0 மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.131 லட்சம் மதிப்பீட்டில் இருபுறங்களிலும் செடிகள் நடுதல், செடிகளுக்கு தானியங்கி முறையில் தண்ணீர் பாய்ச்சுதல், நடைபாதைகளில் விளக்குகள் அமைத்தல், செயற்கை நீரூற்று அமைத்தல், பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கைகள் அமைத்தல், துருப்பிடிக்காத கைப்பிடிகள் அமைத்தல், நுழைவுவாயிலில் இரும்பு கதவுகள் அமைத்தல், வண்ண ஓவியங்கள் வரைதல் உள்ளிட்ட அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருங்குடி மண்டலம், வார்டு-186, வேளச்சேரி உள்வட்டச் சாலை புழுதிவாக்கம் எம்.ஆர்.டி.எஸ். பாலங்களின் கீழ் பகுதியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.41.25 லட்சம் மதிப்பீட்டில் செயற்கை நீரூற்று, பசுமை புல்வெளி, செடிகள் நடுதல், நடைபாதை அமைத்தல், மின்விளக்கு வசதி  உள்ளிட்ட அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் அனைத்தும் மார்ச் மாத இறுதிக்குள் முடிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Singara ,Chennai , Bridge beautification work under Singara Chennai 2.0 project to be completed by March-end: Corporation announcement
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!