சென்னை: நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் வனத்துறையினரின் அனுமதியின்றி வளர்க்கப்பட்ட ‘அலெக்சாண்டரியன்’ கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மேல் நடவடிக்கைக்கு பரிந்துரைத்துள்ளனர். தனியார் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நகைச்சுவை நடிகராக தொடங்கி, தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர். இவர் தனது குடும்பத்துடன் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார். நடிப்பிற்கு அப்பாற்பட்டு சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப்களில் வீடியோகளில் அக்டிவ்-வாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்.
மேலும், செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வமுடையவராக உள்ள நடிகர் ரோபோ சங்கர் தனது வீட்டில் நாய்கள், பூனைகள், புறாக்கள் என அனைத்து வகையான விலங்குகளையும் வளர்த்து வருகிறார். இதில் இவர் வைத்திருக்கும் கிளிகள் ‘அலெக்சாண்டரியன்’ இனத்தை சேர்ந்தவை. இந்த கிளிகளுடன் சமீபத்தில் வீடியோ ஒன்றை சமூக வலையதளங்களில் நடிகர் ரோபோ சங்கர் வெளியிட்டார். இந்த வீடியோவை பார்த்தவர்கள் வனத்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர். இதனடிப்படையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் சோதனை செய்த வனத்துறையினர் 2 கிளிகளையும் பறிமுதல் செய்தனர். இந்திய வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் பல்வேறு விலங்குகள், பறவைகள் பாதுகாக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் உள்ள விலங்குகள், பறவைகள் வீட்டில் வளர்க்க உரிய அனுமதி பெற வேண்டும். அந்தவகையில் அனுமதியின்றி நடிகர் ரோபோ சங்கர் ‘அலெக்சாண்டரியன்’ கிளிகளை வளர்த்ததன் காரணமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கிளிகளை வனத்துறையினர் தற்போது சென்னை கிண்டியில் உள்ள தேசிய சிறுவர் பூங்காவில் ஒப்படைத்துள்ளனர். மேலும் கிளிகளை வளர்த்து தொடர்பாக நடிகர் ரோபோ சங்கரிடம் வனத்துறையினர் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்திய வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் பல்வேறு விலங்குகள், பறவைகள் பாதுகாக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.