திருப்பூர்: திருப்பூர் ஆஷர்நகர் பகுதியில் ஒருவர் சர்க்கரை நோய் உள்ளிட்ட சில நோய்களுக்கு விரைவாக தீர்வு காணப்படும் எனவும், இதற்கான மருந்துகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் யூ டியூபில் அடிக்கடி வீடியோ பதிவிட்டு வந்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் வினீத் மாவட்ட சுகாதார துறைக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேற்று சென்றனர். அப்போது அப்பகுதியில் கற்பக விருட்சம் நலவாழ்வு மையம் இயங்கியதும், பேராசிரியர் இ-மருத்துவர் என்.முரளிக்குமார் பிஇஎம்எஸ் என பெயர் பொறித்து இருந்ததும் தெரியவந்தது.
மேலும் மையத்துக்குள் சோதனையிட்டதில், பல்வேறு சிறிய வகையிலான பாக்ஸ்களில் மருந்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முரளிக்குமார் என்பவர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். விசாரணையில், முரளிக்குமார், தன்னிடம் வருகிறவர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததும், ஆனால் அவரிடம் சித்த மருத்துவம் பயின்றதற்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. இதுகுறித்த அறிக்கை கலெக்டர் வினீத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, கலெக்டர் உத்தரவின்பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சிகிச்சை மையத்துக்கு சீல் வைத்தனர்.