சென்னை: மத்திய பிரதேசத்தில் நடைபெற்று வரும் 66வது அனைத்து இந்திய காவல் பணித்திறனாய்வு போட்டியில் அறிவியல் சார்ந்த புலனாய்வு பிரிவின், காவல் உருவப்படம் (Scientific Aid Investigation/Police Portrait) பிரிவில் முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்ற சென்னை மத்திய குற்றப்பிரிவு முதல்நிலைக் காவலரை காவல் ஆணையாளர் பாராட்டினார்.
66வது அனைத்து இந்திய காவல் பணித்திறனாய்வு போட்டி 2022-23 (66th All India Police Duty Meet 2022-23) போட்டிகள் 13.02.2023 முதல் 17.02.2023 வரை, மத்தியபிரதேச மாநிலம், போபாலில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், 1.அறிவியல் சார்ந்த புலனாய்வு (Scientific Aids to Investigation), 2.கணினி விழிப்புணர்வு (Computer Awareness, 3.புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு (Photo and Video), 4.நாசவேலை தடுப்பு சோதனை (Anti Sabotage check), 5.மோப்பநாய்களின் திறமை (Sniffer Dogs) ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
அறிவியல் சார்ந்த புலனாய்வு போட்டியின், காவல் உருவப்படம் (Police Portrait Event) பிரிவில் 23 மாநிலங்களிலிருந்து 60 காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில், தமிழக காவல்துறை அணியைச் சேர்ந்த, சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவில் (CCB/GCP) பணிபுரிந்து வரும் முதல்நிலைக் காவலர் M.ஆனந்த பெருமாள் (மு.நி.கா.44224) என்பவர் கலந்து கொண்டு 47.3/50 மதிப்பெண்கள் பெற்று 66வது அனைத்து இந்திய காவல் பணித்திறனாய்வு போட்டியின் இப்பிரிவில் முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்றார்.இப்போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று, தமிழக காவல்துறைக்கும், சென்னை பெருநகர காவல்துறைக்கும் பெருமை சேர்த்த முதல்நிலைக் காவலர் ஆனந்த பெருமாளை. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் பாராட்டினார்.