கோவை: தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில் 60 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக, சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவையில் கடந்த அக்டோபர் மாதம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் சிலிண்டர் வெடித்தது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் குண்டு வெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த தீடீர் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை, கோவை, நெல்லை, தென்காசி, மயிலாடுதுறை உள்ளிட்ட பல பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் கொடுங்கையூர், மண்ணடி உள்ளிட்ட 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவையில் உக்கடம், குனியமுத்தூர், கரும்புக்கடை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் என்ஐஏ சோதனை நடைபெறுகிறது.
நெல்லை மாவட்டம் குன்னத்தூர் அருகே கரிக்காதோப்பில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படும் நபர்களின் வீடுகளில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.