×

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை ஒருமனதாக நிறைவேற்றிய சட்டப்பேரவையை அவமதிக்கிறார் ஆளுநர்: எத்தனை உயிர்கள் பலியானால் கையெழுத்திடுவார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: ஆன்லைன் ரம்மியால் எத்தனை உயிர்கள் பலியானால் ஆளுநர் கையெழுத்திடுவார். ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய சட்டமன்றத்தை ஆளுநர் அவமதிக்கிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘உங்களில் ஒருவன் பதில்கள்’ என்ற தலைப்பில், மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சிறைக் கைதிகள் படிக்கின்ற வகையில் சிறைச்சாலைகளில் நூலகம் அமைக்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்காக சிறைத்துறைக்கு பலரும் ஆர்வத்தோடு புத்தகங்களை வழங்கி வருகிறார்கள். ராமநாதபுரத்தைச் சேர்ந்த 92 வயது பெரியவர் பாலகிருஷ்ணன், தனது சேகரிப்பில் இருந்த 300 புத்தகங்களையும் சிறைத்துறைக்கு வழங்கி இருக்கிறார். சிறைக்கைதிகள் பயன்பெற வேண்டும் என்று கொடுத்திருக்கும் அவரது முடிவு மிகவும் பாராட்டத்தக்கது. இதை பலரும் பின்பற்ற வேண்டும்.

மிசாவில் அரசியல் கைதியாக நான் இருந்தபோது, நிறைய புத்தங்களைப் படிக்கும் வாய்ப்பு சிறைச்சாலையில் கிடைத்தது. அரசியல், வரலாற்று புத்தகங்களை தாண்டி நிறைய நாவல்களையும் படித்தேன். சிறைச்சாலை தனிமையைப் போக்க நல்ல நண்பன் புத்தகங்கள்தான். வேலூர் புறநகர் அலமேலுமங்காபுரம் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிக்குச் சென்று காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்தேன். அதேபோல மாணவர்களுக்கான உணவு தயாரிக்கும் மையத்தையும் சென்று பார்த்தேன். உணவு தரமாக தயார் ஆகிறதா, உரிய நேரத்துக்கு கொண்டுபோய்க் கொடுக்கப்படுகிறதா என்று பார்த்தேன்.

அதிகாரிகள், அலுவலர்களோடு இரண்டு நாட்கள் அமர்ந்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிற அனைத்துப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தேன். அதிகாரிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள் என்பதை அறிந்து எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு சில இடங்களில் சுணக்கம் இருந்தாலும் - அதுவும் அன்று முதல் சரி செய்யப்பட்டு விட்டது. யார் மேலேயும் நம்பிக்கை இல்லாமல் இந்த ஆய்வு திட்டத்தை நான் தொடங்கவில்லை. எல்லாம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்கிற மனநிறைவை அடைவதற்காகவே இந்த பயணத்தை மேற்கொண்டு வருகிறேன்.

வருகிற 15 (இன்று), 16 தேதிகளில் சேலத்துக்குச் செல்கிறேன். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட பணிகளை ஆய்வு செய்ய இருக்கிறேன். புதுமைப் பெண் - கல்வித் திட்டம் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவிகள், உயர்கல்விக்கு வந்தால், அவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிற மகத்தான திட்டம். முதலில், 1 லட்சத்து 16 ஆயிரம் மாணவிகள் இந்த தொகையைப் பெற்றார்கள். பட்டாபிராம் இந்துக் கல்லூரியில் நடந்த இரண்டாம் கட்டத் தொடக்க விழா மூலமாக மேலும் 1 லட்சம் மாணவிகள் பயன்பெற போகிறார்கள். உதவித்தொகை பெற வந்த மாணவிகளின் முகத்தில் மலர்ச்சியைப் பார்த்தேன். எத்தனையோ மாணவிகளின் வாழ்க்கையில் கலங்கரை விளக்கமாக அமைந்திருக்கிறது இந்த திட்டம்.

பொய் வாக்குறுதிகளைக் கொடுத்துதான், திமுக ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டது என்று, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருக்கிறார். தூத்துக்குடியில் போராடியவர்களை துப்பாக்கியால் சுடச் சொல்லிவிட்டு, ‘டிவியைப் பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன்’ என்று பொய் சொன்னவர் அப்படித்தான் பேசுவார். அளித்த வாக்குறுதிகளில் 85 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறோம். சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம். முன்பு சொன்ன புதுமைப் பெண் திட்டம் என்பது நாங்கள் தேர்தல் வாக்குறுதியில் சொல்லாதது. ஓரிரு திட்டங்கள் பாக்கி இருக்கிறது. அது எல்லாவற்றையும் வருகிற ஓராண்டிற்குள்
நிறைவேற்றிக் காட்டுவோம்.

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி யார் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லாமல், மணிக்கணக்கில் எவ்வாறு பேசுவது என்பதை நான் தெரிந்து கொண்டேன். பாஜ ஆட்சி மீதும், பிரதமர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. அது எதற்குமே பிரதமர் பதில் சொல்லவில்லை. ‘நாட்டு மக்கள் எனக்கு கவசமாக இருக்கிறார்கள்’ என்பதை மக்கள் சொல்லவில்லை, அவராகச் சொல்லிக் கொள்கிறார். ‘சேறு வீசுங்கள் - தாமரை மலரும்’ என்று சொல்லி இருக்கிறார் பிரதமர். இவ்வாறு வார்த்தை ஜாலங்கள்தான் அவரது உரையில் இருந்ததே தவிர, பிபிசி ஆவணப்படம் பற்றியோ, அதானி விவகாரம் குறித்தோ அவர் விளக்கம் அளிக்கவில்லை.

நாட்டுக்கு கொடுத்த வாக்குறுதியில் எதை நிறைவேற்றி இருக்கிறோம் என்று பிரதமர் வரிசைப்படுத்தவில்லை. சேதுசமுத்திர திட்டம், நீட், மாநில உரிமைகள், ஆளுநரின் தலையீடுகள், ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காதது என எத்தனையோ கேள்விகளை திமுக உறுப்பினர்கள் கேட்டார்கள். அதற்கும் பிரதமர் உரையில் பதில் இல்லை. குறிப்பாக தமிழ்நாட்டுக்குச் சொல்ல பிரதமரிடம் எதுவுமே இல்லை. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கி மீள முடியாமல் தற்கொலை செய்துகொள்பவர்களைப் பற்றிய செய்திகள் தினந்தோறும் நாளிதழ்களில் வருகிறது.

தன்னுடைய மகன் ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக வேலை பார்த்த கம்பெனியில் பணத்தைக் கையாடல் செய்திருக்கிறான் என்று தெரிந்து அவனது அம்மா தற்கொலையே செய்து கொண்டார். சென்னை வியாசர்பாடியில்தான் இது நடந்திருக்கிறது. ரியாஸ் கான் என்பவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து காவிரி ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். கூலித் தொழிலாளி பிரபு, தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். குணசீலன் என்கிற கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்டார். இவை அனைத்தும் கடந்த ஒரு வாரத்திற்குள் நடந்தவை. இவை எல்லாம் தமிழ்நாடு ஆளுநருக்கு தெரியவில்லையா, இன்னும் எத்தனை உயிர்கள் பலியானால் அவர் கையெழுத்து போடுவார்?

இவ்வாறு ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். அதன்படி உரிய சட்டத்தை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய சட்டமன்றத்தை அவமதிக்கிறார் ஆளுநர். அமைச்சரவை அனுப்பிய அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், அதே சட்டத்தைச் சட்டமன்றம் மூலமாக நிறைவேற்றி அனுப்பினால் 3 மாதமாக ஒப்புதல் வழங்காமல் இருப்பதுதான் மர்மமாக இருக்கிறது. இதில் என்ன கொடுமை என்றால் ஆன்லைன் விளையாட்டுகளில் வெல்லக் கூடிய தொகைக்கு வரி போடுவதுதான். ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் இது இருக்கிறது.

அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பாஜ அரசின் மீதான நேரடியான குற்றச்சாட்டுகளாக இருக்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வே சீரியஸாக விசாரிக்கிறது. எனவே, இதைப்பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். அதேபோல், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கும் உத்தரவிடப்பட வேண்டும். சகோதரர் ராகுல் காந்தி எழுப்பியுள்ள கேள்விகள் ஆணித்தரமானவை. இதை பற்றி ஒரு வார்த்தை கூட பிரதமர் பதிலளிக்காதது அதிர்ச்சியாக இருக்கிறது. ராகுல்காந்தி, கார்கே போன்றவர்களது பேச்சுகளை நாடாளுமன்ற அவைக்குறிப்பில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். இது நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளுக்கு எதிரான செயல். அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதால் மக்களின் மனங்களில் இருந்து நீக்கிவிட முடியாது.

அமலாக்கத்துறைதான் எதிர்க்கட்சிகளை இணைத்திருக்கிறது என்று பிரதமர் பேசியிருப்பது, அமலாக்கத்துறை எதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதற்கான பிரதமரின் ஒப்புதல் வாக்குமூலம் இது. எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குகிறேன் என்று நாடாளுமன்றத்தில் முதல் முறையாக ஒரு பிரதமரே ஒப்புக் கொண்டிருக்கிறார். இது நாட்டுக்கும் நல்லது இல்லை. தன்னாட்சி அமைப்புகளுக்கும் நல்லது இல்லை. ஜனநாயகத்துக்கும் நல்லது இல்லை.
இரட்டை இலைச் சின்னம் அதிமுகவிற்கு கிடைத்துவிட்டாலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற, ஊரக உள்ளாட்சித் தேர்தல் - இவ்வாறு இதற்கு முன்னர் நடந்த எல்லா தேர்தல்களிலும் தோற்கடிக்கப்பட்ட சின்னம்தான் இரட்டை இலை என்பதை மறந்துடக் கூடாது.

ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளாக இருந்தால், எதையும் செயல்படுத்தக் கூடியவன் நான். அவதூறுகள், பொய்கள், விதண்டாவாதங்களுக்குப் பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. மக்கள் என்னை நம்பி வாக்களித்திருக்கிறார்கள். அவங்களுக்கான முழு நன்மைகளையும் எனது ஆட்சிக்காலத்தில் செய்து முடிக்க வேண்டும் என்ற ஒன்றே எனது இலக்கு. தங்களது இருப்பைக் காண்பித்துக் கொள்வதற்காக வீண் அவதூறுகளை யார் சொன்னாலும் அதற்கு நான் பதில் அளிப்பது இல்லை. ஆக்கப்பூர்வமாக அடுத்து என்ன செய்யலாம் என்கிற சிந்தனைதான் எதிர்க்கட்சிகளை நிலைகுலைய வைத்திருக்கிறது. அவர்களுக்கு அரசியல் செய்ய நான் வாய்ப்பு அளிக்கவில்லை என்பதுதான் அவர்களது அதிகப்படியான கோபம் என்று நினைக்கிறேன். ஆக்கப்பூர்வமான அரசியல் என் பாணி. அவதூறு அரசியல் அவர்கள் பாணி. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

Tags : Governor ,Chief Minister ,M.K.Stal , Governor Insults Legislature Passing Online Rummy Ban Act Unanimously: How Many Lives Will He Sign, Asks Chief Minister M.K.Stal?
× RELATED டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...