×

தொன்மையான 137 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில வல்லுநர் குழு ஒப்புதல்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுரையின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தொன்மையான திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில் திருப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்கிட வாரந்தோறும் மாநில அளவிலான வல்லுநர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (14.02.2023) தொடர்பான மாநில அளவிலான 51-வது வல்லுநர் குழு கூட்டம் இணை ஆணையர் (திருப்பணி) பொ.ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.  

இக்கூட்டத்தில் சென்னை, இராயப்பேட்டை, அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கோயில், சைதாப்பேட்டை, அருள்மிகு தேவி பொன்னியம்மன் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், தம்பிக்கோட்டை, அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னகரம், அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில், தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை, அருள்மிகு தேர்வீதி விநாயகர் திருக்கோயில், கன்னியாகுமரி மாவட்டம், காட்டுப்புதூர், அருள்மிகு சந்தன நங்கையம்மன் திருக்கோயில், விழுப்புரம் மாவட்டம், இரும்பை, அருள்மிகு மகாகாளீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, அருள்மிகு திருநாவுக்கரசுமடம், கதிரிப்புரம்,

அருள்மிகு இலஷ்மி நரசிம்மசுவாமி  திருக்கோயில், வேலூர் மாவட்டம், கார்ணாம்பட்டு, அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், இராணிப்பேட்டை மாவட்டம், சக்கரமல்லூர், அருள்மிகு திருகண்டீஸ்வரர் திருக்கோயில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, அருள்மிகு பரமேஸ்வரர் திருக்கோயில், சேலம் மாவட்டம், காருவள்ளி சின்னதிருப்பதி, அருள்மிகு பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில், மயிலாடுதுறை மாவட்டம், தலைச்சங்காடு, அருள்மிகு நான்மதியப் பெருமாள் திருக்கோயில், அரியலூர் மாவட்டம், பொய்யாதநல்லூர், அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் உள்ளிட்ட 137 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

மாநில அளவிலாக வல்லுநர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் திருக்கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும். இக்கூட்டத்தில் தலைமைப் பொறியாளர் சு.ரெகுநாதன், ஆகம வல்லுநர்கள் முனைவர் கே.பிச்சை குருக்கள், அனந்த சயன பட்டாச்சாரியார், கோவிந்தராஜப்பட்டர்,  அங்கீகரிக்கப்பட்ட தகுதி வாய்ந்த ஸ்தபதி முனைவர் கே.தட்சிணாமூர்த்தி, தொல்லியல் துறை வல்லுநர்கள் சீ.வசந்தி, வெ.இராமமூர்த்தி, தொல்லியல் துறை வடிவமைப்பாளர் முனைவர் டி.சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : State Expert Committee approves to start restoration work on 137 ancient temples
× RELATED பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு,...