திருக்காட்டுப்பள்ளி : ஆவாரம்பட்டி கும்மான் ஏரி பகுதியில் 95 ஏக்கர் பூச்சி தாக்குதலில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் ஆவாரம்பட்டி, கும்மான் ஏரி பகுதியில் விவசாயம் செய்துள்ள விவசாயி சிங்காரவேல் கூறுகையில், நாங்கள் இப்பகுதியில் சுமார் 95 ஏக்கரில் கோ-50-46 - திருச்சி-3 ஆகிய நெல் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்திருந்தோம். ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்திருப்பதாகவும் ஏரி தண்ணீரை நம்பி விவசாயம் செய்திருக்கிறோம்.
கடந்த வாரத்தில் எதிர்பாராத விதமாக பெய்த கனமழையினால் இந்த பகுதியில் உள்ள அனைத்து வயல்களும் பூச்சி தாக்குதல், புகையான் மற்றும் குலைநோய் தாக்குதல், வேர் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு சாறு உறிஞ்சும் பூச்சிகள் நெல் பால் வைக்கும் சமயத்தில் பாலை உறிஞ்சிவிட்டதால் அனைத்து நெல்மணிகளும் பதராகிவிட்டது.
நாங்கள் செலவு செய்த பணம் கூட எங்களால் எடுக்க முடியாத நிலை உருவாகிவிட்டது.
கஷ்டப்பட்டு விவசாயம் செய்த விவசாயிகளான எங்களுக்கு பலனில்லாமல் போய்விட்டதை நினைத்து மிகவும் மனவேதனையடைகிறோம். எனவே அதிகாரிகள் நேரடியாக எங்களது பகுதியில் பாதிப்புள்ளாகி இருக்கும் வயல்களை பார்வையிட்டு எங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.