×

போடி அருகே அமைந்துள்ள கொட்டகுடி ஆற்றின் தடுப்பணையை உயர்த்த வேண்டும்

*வறட்சியில்லா விவசாயம் தொடரும்

*விவசாயிகள் எதிர்பார்ப்பு

போடி : போடி அருகே குரங்கணி சாலையில் கொட்டகுடி ஆற்றுக்குள் இருக்கும் பிச்சாங்கரை தடுப்பணையை உயர்த்தி கட்டினால் வறட்சியில்லாமல் விவசாயம் தொடரும் என்பதுடன், குடிதண்ணீருக்கும் பற்றாக்குறை ஏற்படாது என விவசாயிகள் கூறியுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

போடி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் குரங்கணி மலைச்சாலையில் கொட்டகுடி கிராம ஊராட்சி அமைந்துள்ளது. இதனை சுற்றிலும் முட்டம், மேல் முட்டம், முதுவாக்குடி, சென்ட்ரல் ஸ்டேஷன், டாப் ஸ்டேஷன், கொழுக்குமலை, காரிப்பட்டி, அடகுபாறை, கொம்புதூக்கி அய்யனார் கோயில், பிச்சாங்கரை, முந்தல், மேலப்பரவு, கீழ‘ப்பரவு என பல்வேறு மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதி முழுவதும் தென்னை, மா, இலவு, பலா, உச்சிமலையில் காபி, மிளகு, ஏலக்காய், தேயிலை, கொய்யா, எலுமிச்சை, பப்பாளி, சப்போட்டா மற்றும் ஒரு போகம் நெல் சாகுபடி என தொடர் விவசாயம் நடைபெற்று வருகிறது.

குரங்கணி பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் பெய்யும் மழையினால் உருவாகும் தண்ணீர் இப்பகுதியில் இருக்கும் சாம்பலாற்று ஊற்றணைக்கு வந்து சேரும். மேலும்இ சாம்பலாற்று ஊற்றில் இயற்கையாகவே தண்ணீர் பெருக்கெடுக்கும். இந்த தடுப்பணையிருருந்து மறுகால் பாயும் தண்ணீரால் உருவாகும் கொட்டகுடி ஆறு அங்கிருந்து கொட்டகுடி கிராமத்தை கடந்து பிச்சாங்கரை வழியாக முந்தல், கூலிங்காற்று தடுப்பணை, அணைப்பிள்ளையார் கோயில், புதூர் வலசைத்துறை, அணைக்கரைப்பட்டி, துரைராஜபுரம் காலனி, பூதிப்புரம், தேனி வழியாக மூல வைகையாற்றில் கலக்கிறது.

போடி நகர மக்களுக்கு தினந்தோறும் குடிநீர் கிடைக்க இந்த சாம்பலாற்று ஊற்றணையே முக்கிய ஆதாரமாக உள்ளது. இதிலிருந்து போடி நகராட்சி நிர்வாகம் போதிய தண்ணீரை எடுத்துக்கொள்கிறது. இதற்காக சாம்பலாற்று தடுப்பணையிலிருந்து ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டு அவற்றின் வழியாக போடி பரம சிவன் கோயில் மலைடிவாரத்தில் இருக்கும் பவர் ஹவுஸில் சுத்திகரிப்பு செய்து குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது,மேலும், கொட்டகுடி ஆற்றின் நேரடி பாசனத்தில் ஒரு போகம் நெல் விவசாயம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அத்துடன் கொட்டகுடி ஆற்றின் நீர்வரத்தால் இப்பகுதியில் உள்ள சிறுகுளம், மரிமூர்குளம், பங்காருசாமி கண்மாய், சங்கரப்ப நாயக்கன் கண்மாய் உள்பட 20க்கும் மேற்பட்டவை உள்ளன.
இந்நிலையில் கோடைகாலங்களில் கொட்டகுடி ஆறும், அதனை நம்பியுள்ள குளம், கண்மாய்களும் வறண்டுபோவதால் போடி நகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. அத்துடன்,ஆழ்குழாய்கள், கிணறுகளின் நீர்மட்டமும் குறைவதால் தண்ணீர் பிரச்னை அதிகரிக்கிறது.

இந்நிலையில் முந்தல் துவங்கி குரங்கணி சாலை இடையே 5 கி.மீ தூரத்தில் கொட்டகுடி ஆறு அகன்று வனப்பகுதியை கடக்கிறது. விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் விதமாக இந்த ஆற்றின் குறுக்கே மிக உயர்ந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த பாலத்திற்கு மேற்குப்பகுதியில் நீண்ட தடுப்பணையும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தண்ணீரை திருப்பி விடுவதற்கான ஷட்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மெகா தடுப்பணையை உயர்த்தினால் இப்பகுதியில் கோடை காலத்தில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்பது இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த அணை மற்றும் ஆற்றின் சுற்றுப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை அரச மீட்டு பிச்சாங்கரை தடுப்பணையை உயர்த்தி பெரிய அளவில் மாற்றினால், இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையே ஒதுபோதும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. எனவே பிச்சாங்கரை அணைப்பகுதியினை அதிகாரிகள் ஆய்வு செய்து அதனை உயர்த்தி கட்டுவதற்கும் அருகிலுள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு அணையுடன் சேர்த்து தண்ணீர் தேக்கி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்ற
னர்.

இப்பிரச்னை குறித்து விவசாயி தங்கமுத்து கூறுகையில், போடி மலைப்பகுதியில் விவசாயிகள் அதிகம் உள்ளனர். கொட்டகுடி ஆறு இப்பகுதி மக்களுக்கு உதவியாக உள்ளது. பிச்சாங்கரை பகுதியில் ஏற்கனவே நீண்ட தடுப்பணை இருப்பதால், சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தடுப்பணையை உயர்த்தி தண்ணீர் வீணாகாமல் தடுத்து நிறுத்த வேண்டும்.

இது நடந்தால் இப்பகுதிகளில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். போடி நகராட்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை என்பது எப்போதும் ஏற்படாது. எனவே எங்கள் கோரிக்கையை மாவட்ட அதிகாரிகள் உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

Tags : Bodi , Bodi: By raising the Pichangarai barrage in the Kotakudi river on the Kurangani road near Bodi, drought-free agriculture will be possible.
× RELATED காட்டுமாடு முட்டி விவசாயி படுகாயம்