உடன்குடி : உடன்குடி, மெஞ்ஞானபுரம் பகுதியில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் ஆபத்தான நிலையில் லாரிகளில் விறகு லோடுகள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. உடன்குடி, திருச்செந்தூர் வட்டார பகுதிகளில் ஏராளமான காடுகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள காடுகளில் விறகுகளை வெட்டி விற்பதும், வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்வதையுமே சிலர் தொழிலாக கொண்டு உள்ளனர். தனியார் உடை மரங்காடுகளை விலை கொடுத்து வாங்கி அதனை தரம் பிரித்து வெட்டி வருகின்றனர். இவ்வாறு வெட்டப்படும் உடைமரத்தின் விறகுகள் லாரிகளில் கொண்டு செல்கின்றனர்.
வெளியிடங்களுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படும் போது முறையாக கொண்டு செல்வது கிடையாது என்ற குற்றச்சாட்டு உள்ளது.லாரியில் விறகுகளை உயரமாக ஏற்றி வெறுமனே கயிற்றால் கட்டி கொண்டு செல்கின்றனர். அவ்வாறாக கொண்டு செல்லும் போது சாலைகளில் உள்ள வளைவுகள், பள்ளங்களில் திரும்பும் போது விறகு கீழே விழுந்து கொண்டே செல்கிறது.
மேலும் சாலையில் பயணிக்கும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் சில சமயங்களில் விறகுகள் விழுந்து விபத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதிகளவில் பாரம் ஏற்றிச் செல்லும் போது அதற்குரிய பாதுகாப்பான முறையில் சென்றால் விபத்துகளை தவிர்க்க ஏதுவாக இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து உரிய பாதுகாப்புடன் விறகு லோடு கொண்டு செல்லும் வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.