×

330 திருக்கோயில்களின் சார்பில் மகாசிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும் : அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை : இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள 330 சிவாலயங்களின் சார்பில் ஆடல் வல்லான் சிவ பெருமானின் அருளாற்றலையும், பெருமையையும் பறைசாற்றும் வகையிலும், சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் மகிழும்படி நமது பாரம்பரிய கலை, கலாச்சார மற்றும் ஆன்மீக / சமய நிகழ்ச்சிகளுடன் மகாசிவராத்திரி விழாவினை சிறப்பாக கொண்டாடிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் சார்பில் கொண்டாடப்பட்ட மகாசிவராத்திரி பெருவிழா இறையன்பர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து இந்த ஆண்டு மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர், அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில், பேரூர், அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருநெல்வேலி, அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் ஆகிய 5 திருக்கோயில்கள் சார்பில் மகாசிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள 330 சிவாலயங்களிலும் 18.02.2023 சனிக்கிழமை மாலை முதல் 19.02.2023 ஞாயிற்றுக்கிழமை காலை வரை மகாசிவராத்திரி திருவிழா பக்தர்கள் பங்கேற்புடன்  சிறப்பாக கொண்டாடிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன .

அந்தவகையில், மகாசிவராத்திரி விழாவை கொண்டாடும் அனைத்து திருக்கோயில்களிலும் குறிப்பாக கோபுரங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் முழுமையாக மின் அலங்காரங்கள், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் உரிய வரிசைத் தடுப்பு வசதிகள், காவல்துறை பாதுகாப்பு, மருத்துவ முகாம்கள், கழிவறை மற்றும் சுகாதார வசதி, குடிநீர் வசதி, தேவையான இடங்களில் தீயணைப்பு துறை வாகனம் நிறுத்தம், பக்தர்களின்  இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திட இடஒதுக்கீடு ஆகியவற்றை ஏற்பாடு செய்திட வேண்டுமெனவும், இது தொடர்பாக தொடர்புடைய துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி அவர்களின் ஒத்துழைப்புடன் திருவிழா நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரி விழாவில் மங்கள இசை, தேவார திருமுறை விண்ணப்பம். பக்தி சொற்பொழிவுகள். தமிழ் பக்தி இசை, நாட்டிய நாடகம், பரத நாட்டியம், வில்லிசை, கிராமிய பக்தி இசை பாடல்கள் போன்ற கலை நிகழ்ச்சிகளை தொகுத்து ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு குறிப்பிட்ட கால அளவு நிர்ணயம் செய்து மகா சிவராத்திரி இரவு முழுதும் பக்தர்கள் கண்டு பயன்பெறும் வகையில் உரிய ஏற்பாடுகளை அந்தந்த திருக்கோயிலின் நிதி வசதிக்கேற்பவும், உபயதாரர்களைக் கொண்டும் சிறப்பாக நடத்திட வேண்டும். மேற்படி கலை நிகழ்ச்சிகளுக்கு கலைஞர்களை தேர்வு செய்யும் பொழுது தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி மற்றும் இசைப் பள்ளிகளில் பயின்ற கலைஞர்கள் மற்றும் கலை பண்பாட்டுத்துறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த பகுதியில் உள்ள கலைஞர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

மகாசிவராத்திரி அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்திடவும், எவ்விதமான புகார்களுக்கும் இடமளிக்கா வண்ணம் நிகழ்ச்சிகளை நடத்திடவும், திருக்கோயில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு. இந்த ஆண்டு மகாசிவராத்திரி விழாவினை கண்டுகளிக்கும் பக்தர்கள் மனநிறைவடையும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags : Mahashivaratri ,Minister ,Shekharbabu , Temple, Mahashivaratri, Festival
× RELATED பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்...