மதுரை: காதலிக்க மறுத்த மாணவி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவி, பிளஸ் 1 படித்து வருகிறார். இதே பகுதியில் ஒரு வருடத்திற்கு முன்பு மணிரத்னம் என்பவர், இந்த மாணவியை ஒருதலைபட்சமாக காதலித்தாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு அடிதடி பிரச்னையில் மணிரத்னம் சிறை சென்றார். இவர் மீது மூன்று வழக்குகள் உள்ள நிலையில், சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்தவர் மீண்டும் மாணவியிடம், காதலிக்க வற்புறுத்தியுள்ளார். அதற்கு மாணவி மறுத்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை, மணிரத்னம் டூவிலரில் தனது நண்பர்களுடன் வந்து, மாணவியின் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பினார். இதில் வீட்டின் முன்பகுதி சேதமானது. இதுகுறித்து மாணவியின் தந்தை தெப்பக்குளம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து மணிரத்னத்தை தேடி வருகின்றனர்.