திருவொற்றியூர்: மாதவரம் தணிகாசலம் நகரில் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். மாதவரம் மண்டலம், தணிகாசலம் நகர், 80அடி சாலையில் தனியார் சிலர் ஆக்கிரமித்து வீடு மற்றும் கடைகளில் முகப்புகளை கட்டியிருந்தனர். இதனால், அந்த வழியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றி வேண்டும் என்று மாதவரம் மண்டல அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு கடந்த மாதம் அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இந்நிலையில், மண்டல உதவி ஆணையர் முருகன் தலைமையில் செயற்பொறியாளர் சின்னதுரை, உதவி செயற்பொறியாளர் முத்தமிழன், உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், குமார், உஷா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் வந்து, சாலையோரத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட கான்கிரீட் முகப்புகள், இரும்பு தகடுகள் போன்றவற்றை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.