×

மோடிக்கு நான் பயப்பட மாட்டேன்: வயநாட்டில் ராகுல்காந்தி எம்பி பேச்சு

திருவனந்தபுரம்: பிரதமர் மோடியின் கைகளில் அனைத்து ஏஜென்சிகளும் உள்ளன. அதற்காக நான் அவருக்கு பயப்படப் போவதில்லை என்று வயநாட்டில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி, எம்பி பேசினார். ஒரு நாள் சுற்றுப்பயணமாக ராகுல்காந்தி, எம்பி நேற்று முன் தினம் இரவு கேரளா வந்தார். நேற்று காலை வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொண்ட பின் மாலையில் மீனங்காடி பகுதியில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் இடையே உள்ள நெருக்கம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசினேன். நான் பேசியது அனைத்துமே உண்மையாகும். நான் தவறாக எதுவும் கூறவில்லை. ஆனாலும் நாடாளுமன்ற அவைக் குறிப்பில் இருந்து நான் பேசிய அனைத்தும் நீக்கப்பட்டு விட்டது. பிரதமர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் போது அவருடன் அதானியும் செல்வது ஏன்? வெளிநாடுகளில் பல வியாபார ஒப்பந்தங்களில் அதானி கையெழுத்து போடுவது எப்படி? அதானிக்காக பல சட்டங்கள் மீறப்படுகின்றன. நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் அதானி வாங்குவது எப்படி?

பிரதமருடன் அவருக்கு உள்ள நெருக்கம் தான் இதற்கெல்லாம் முக்கிய காரணமாகும். நான் பேசிய அனைத்திற்கும் ஆதாரம் வேண்டும் என்று நாடாளுமன்ற செயலாளர் கூறினார். அனைத்திற்கும் ஆதாரம் தருகிறேன் என்று நான் பதிலளித்துள்ளேன். பிரதமர் மோடி என்னை தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்துகிறார். ஆனால் அதை நான் பொருட்படுத்தவில்லை. ஏன் என்னுடைய பெயருடன் நேரு என்ற பெயரை சேர்க்கவில்லை, காந்தி என்று சேர்த்தது ஏன் என்று மோடி கேட்கிறார். இந்தியாவில் தந்தையின் குடும்பப் பெயரைத் தான் பின்னால் சேர்ப்பார்கள் என்று அவருக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. பிரதமர் மோடியின் கைகளில் அனைத்து ஏஜென்சிகளும் இருக்கலாம். அதற்காக நான் அவருக்கு பயப்படப் போவதில்லை. ஒரு நாள் மோடி சத்தியத்திற்கு பதில் சொல்ல வேண்டிய நிலைமை கண்டிப்பாக வரும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Modi ,Rahul Gandhi ,Wayanad , I will not be afraid of Modi: Rahul Gandhi MP speech in Wayanad
× RELATED வேலை கேட்டா கடலுக்கு அடியில் போய் நாடகமாடும் மோடி: ராகுல் காந்தி தாக்கு