மும்பை: பால் தாக்கரே மட்டும் காப்பாற்றவில்லை என்றால் மோடியால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது என்று உத்தவ் தாக்கரே பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, மும்பையில் நடந்த வடமாநில மக்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசுகையில், ‘அவர்களுடனான (பாஜக) அரசியல் நட்பை 25 முதல் 30 ஆண்டுகளாக சிவசேனா கட்சி பாதுகாத்து வந்தது.
ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியின் முன்னாள் கூட்டணி கட்சிகளான சிவசேனா மற்றும் அகாலி தளத்தை அவர்கள் (பாஜக) விரும்பவில்லை. இந்துத்துவம் என்றால் நமக்குள் அரவணைப்பு என்று அர்த்தம். பாஜக இந்துத்துவா கட்சி அல்ல; ஒருவரை ஒருவர் வெறுப்பது இந்துத்துவா அல்ல. இந்துக்களிடையே வெறுப்பை பாஜக உருவாக்குகிறது. அதனால் பாஜகவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறினேன். ஆனால் நான் இந்துத்துவத்தை கைவிடவில்லை.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில், அப்போதைய குஜராத் முதல்வரும், தற்போதைய பிரதமருமான மோடியிடம், ‘ராஜதர்மத்தை மதிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். அப்போது சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே தான் மோடியை காப்பாற்றினார். அப்போது அது நடக்காமல் இருந்திருந்தால், அவரால் (மோடி) இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது’ என்றார்.