மும்பை: மும்பை கூகுள் அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு தொடர்பாக ஐதராபாத்தை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் கிளை மும்பையில் செயல்படுகிறது. இந்நிலையில் மும்பை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், கூகுளின் புனே அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்தார்.
அதையடுத்து மும்பை பிகேசி காவல் நிலையத்திற்கு கூகுள் பிரிவு புகார் அளித்தது. அதையடுத்து மும்பை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கூகுள் அலுவலகங்களில் சோதனையிட்டனர். வெடிகுண்டு மிரட்டல் அழைப்பானது போலி என்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஐதராபாத்தை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.