கோவை: கோவை கோபாலபுரம் 2வது வீதியில் வக்கீல் அலுவலகங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. இங்கு கோவை கோர்ட்டில் இருந்து பின்புறம் வழியாக செல்ல வழியிருப்பதால் கோர்ட்டுக்கு வரும் பலர் இந்த பகுதியில் உள்ள டீ கடைக்கு வருவது வழக்கம். இதே போல் இன்று காலை 11 மணியளவில் கோர்ட்டுக்கு வாய்தாவுக்கு வந்த 4 பேர் டீ குடிப்பதற்காக கோபாலபுரம் 2வது வீதியில் உள்ள ஒரு பேக்கரிக்கு வந்தனர்.
அப்போது 4 பேரில் இரண்டு பேர் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் ஒரு வாலிபரின் கழுத்தில் சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற மற்றொரு வாலிபருக்கும் தலை மற்றும் கையில் வெட்டு விழுந்தது. பின்னர் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதைப்பார்த்து பேக்கரிக்கு வந்தவர்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இத்தகவல் அறிந்து வந்த போலீசார் கொலை செய்யப்பட்ட வாலிபர் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். காயமடைந்த மற்றொரு வாலிபர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விசாரணையில், கொலையான நபர் கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் என்பதும், படுகாயமடைந்தவர் சிவானந்தா காலனியை சேர்ந்த மனோஜ் என்பதும் தெரியவந்தது. அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.