×

அதானி விவகாம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மாநிலங்களவை மார்ச் 13-ம் தேதி வரை ஒத்திவைப்பு!

டெல்லி: அதானி விவகாம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற மாநிலங்களவை வருகிற மார்ச் 13-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து பிப்.1ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழும நிறுவனங்கள் மீது அண்மையில் மோசடி குற்றச்சாட்டுகளை  வெளியிட்டது. போலி நிறுவனங்களை தொடங்கி, தனது பங்கு விலையை உயர்த்திக்காட்ட மோசடி செய்தது போன்ற அடுக்கடுக்கான புகார்கள் வெளியானது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனால், அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றது.  உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருந்து 20 இடங்களுக்கு மேல் கௌதம் அதானி தள்ளப்பட்டிருக்கிறார். இந்நிலையில், இந்த குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தி தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் இன்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டுள்ளார்.

இதனால், அவையில் மீண்டும் கூச்சலும், குழப்பமும் நிலவியுள்ளது. இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற மேலவை வருகிற மார்ச் 13-ம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி வருகிற மார்ச் 13-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜெகதீப் தங்கார் கூறியதாவது: திட்டமிட்டே உள்நோக்குடன் அவையை முடக்கும் நடவடிக்கைகள் நடக்கின்றது. அவையை நடத்துவதற்கான வழி இதுவல்ல. ஏற்கனவே நாம் நிறைய நேரம் வீணடித்து விட்டோம். இதுபோன்ற இடையூறுகள் அவையில் ஏற்பட்டால், மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு நான் ஆளாவேன் எனவும் கூறியுள்ளார்.

Tags : Rajya Sabha ,Adani Vivagam , அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மாநிலங்களவை மார்ச் 13-ம் தேதி வரை ஒத்திவைப்பு!
× RELATED மாநிலங்களவை தேர்தலில் பாஜவுக்கு...