பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆழியாற்றில் ஆங்காங்கே ஆழமாக உள்ள தடுப்பணைகளில் பயணிகள் குளிக்க தடை உள்ளது. ஆனால், ஆழியார் அணையை சுற்றி பார்க்க வரும் பயணிகள் பலர், ஆற்றோர பாலத்தின் கீழ் பகுதி மற்றும் அணையை ஒட்டியுள்ள இடங்களில் குளிக்கின்றனர். சிலர் ஆழமான பகுதி மற்றும் சேற்று பகுதி என தெரியாமல் குளிக்கும்போது உயிர்பலி ஏற்படுகிறது. எனவே, ஆழியார் அணை மற்றும் ஆழியாற்று பகுதியில், உயிர்பலியை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
தடையை மீறி குளிக்கும்போது உயிர்பலி அதிகமாக நடைபெறுவதால், மேலும், இனி வரும் காலங்களில் உயிர்பலி உள்ளிட்ட விபரீத சம்பவம் ஏற்படுவதை தவிர்க்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடந்த 4ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு ஆழியார் அணை, தடுப்பணைகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர்.
கோட்டூர் பேரூராட்சி சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோட்டூர் பேரூராட்சிக்குட்பட்ட ஆழியார் மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆற்றுப்படுகைகளில் உள்ள அணைக்கட்டுகளில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்கும்போது, அதன் ஆழம் மற்றும் சுற்றுப்புற சூழல் தெரியாமல் குளிக்கின்றனர். ஆனால் அப்பகுதியில் துயர சம்பவங்கள் அதிகளவு நடைபெற வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிள் அணைக்கட்டு பகுதிகளில் இறங்க வேண்டாம் என அறிவிக்கப்படுகிறது. மேலும், ஆற்றோரம் வசிக்கும் பொதுமக்கள், ஆழியாற்றில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த கேட்டுகொள்ளப்படுகிறது/ இவ்வாறு அதில் கூறப்படுகிறது.