அய்யலூர் : அய்யலூர், எரியோடு பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர், எரியோடு போன்ற சுற்றுவட்டார கிராமங்களில் பருவமழை ஓரளவு கை கொடுத்ததால் நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இப்பகுதிகளில் காய்கறிகள், பூக்கள், சாகுபடி அதிகமாக செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக படிப்படியாக சின்ன வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது.
எனவே இப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் சின்ன வெங்காயம் பயிரிட்டனர். தற்போது அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. உழவு கூலி , ஆட்கள் கூலி, என அதிக அளவில் பணம் செலவு செய்துள்ள நிலையில் போதிய விலை கிடைக்குமா என எதிர்பார்த்து உள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘இங்கு தக்காளி சாகுபடிக்கு அடுத்தபடியாக சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
பருவமழை கை கொடுத்த நிலையில் தற்போது பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளன.பல்வேறு இன்னல்களுக்கு இடையேவிவசாயம் செய்து வருகிறோம். இதற்கு விலை கிடைக்குமா என தெரியவில்லை பெரும்பாலும் இடைத்தரகர்கள் குறைந்த விலையில் வாங்கி காய்கறிகளை அதிக விலைக்கு விற்று லாபம்பார்க்கின்றனர். எனவே அரசு தங்களிடம் நேரடியாக காய்கறிகளை வாங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்’’ என்றனர்.