×

காந்தி மார்க்கெட்டுக்கு நேந்திரன் வாழைத்தார் வரத்து அதிகரிப்பு

பொள்ளாச்சி :   பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாரந்தோறும் நடைபெறும் வாழைத்தார் ஏலநாளின்போது, சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி ஈரோடு, கரூர், திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதியிலிருந்தும் வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டு, தரத்திற்கேற்றார் போல், விலை நிர்ணயம் செய்யப்பட்டு எடை மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

 இதில், கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழைக்கு பிறகு வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி வாழை சாகுபடி ஓரளவு இருந்தாலும், கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் கடும் பனிப்பொழிவால் வாழைத்தார் அறுவடை பாதிக்கப்பட்டு, மார்க்கெட்டுக்கு அதன் வரத்து குறைவானது. வரத்து குறைவால் பெரும்பாலான வாழைத்தார்கள் கூடுதல் விலைக்கே விற்பனையானது.

 இந்நிலையில், கடந்த இரண்டு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், பல்வேறு பகுதிகளில் வாழைத்தார் அறுவடை அதிகமானது. நேற்று நடந்த சந்தை நாளின்போது, ஈரோடு மாவட்ட பகுதியிலிருந்து நேந்திரன் வாழைத்தார் வரத்து வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. சில மாதத்திற்கு பிறகு நேந்திரன் வரத்து அதிகரிப்பால், அதன் விலை குறைந்தது.

 மேலும் நேற்று, தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பூவன்தார் வரத்து அதிகமாக இருந்தது. பிற வாழைத்தார்கள் சுற்றுவட்டார பகுதியிலேயே இருந்து வந்துள்ளது. சில வாரத்துக்கு பிறகு, வாழைத்தார் வரத்து அதிகமாக இருந்தாலும், கேரள வியாபாரிகள் அதிகம் வாங்கி சென்றதால், இந்த வாரத்திலும் கூடுதல் விலைக்கு விற்பனையானது.

  இதில், செவ்வாழை தார் ஒன்று ஒரு கிலோ ரூ.53 வரையிலும், பூவந்தார் ஒரு கிலோ ரூ.38க்கும், மோரீஸ் ஒரு கிலோ ரூ.36க்கும், கற்பூரவள்ளி ஒரு கிலோ ரூ.40க்கும், கேரள ரஸ்தாளி ஒரு கிலோ ரூ.42க்கும், நேந்திரன் ஒரு கிலோ ரூ.35க்கும் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Nendran ,Gandhi market , Pollachi: During the weekly banana auction day at Pollachi Gandhi Market, surrounding villages
× RELATED சித்திரை விசுவையொட்டி பொள்ளாச்சி...