குமரி: காதலர் தினத்தையொட்டி தோவாளை மலர் சந்தையில் ரோஜா பூக்கள் விலை 4 மடங்கு அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனால் பூக்கள் தேவை அதிகரித்துள்ளதால் அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. ஸ்டெம் ரோஜா கட்டு ஒன்றின் விலை 150 ரூபாயாக இருந்த நிலையில், 550 ரூபாயாக உள்ளது. சில்லறையில் ஒரு பூவின் விலை 10 ரூபாயாக இருந்த நிலையில், 35 ரூபாயாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக தாஜ்மஹால் ராஜாவான சிகப்பு ஸ்டெம் ரோஜா அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. தேவை அதிகரித்துள்ள நிலையில், ஓசூர், பெங்களூரு பகுதிகளில் நிலவி வரும் கடும் குளிர் காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளது. குமரி தோவாளை மலர் சந்தையில் தினமும் சுமார் 750 கட்டு ஸ்டெம் ரோஜாக்கள் வந்து கொண்டிருந்த நிலையில், அது 250 கட்டுகளாக குறைந்துள்ளது.