சென்னை: ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க பெண்கள், வயதானவர்கள், குழந்தைகளுக்கு கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளதாக ஹஜ் அசோசியேசன் தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார். இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் வெளியிட்ட அறிக்கை: 2023 ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான 25 புறப்பாட்டு இடங்களை ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்ப படிவங்களை எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக பெற்றுக் கொள்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் புனித பயணத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளும், அவர்களுக்கான பொருளாதார விலக்கும் அளிக்கப்படுகிறது. இதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட தொகையை ஹஜ் பயணம் மேற்கொள்வோர் முன்கூட்டியே செலுத்த வேண்டும்.
தற்போது போர்வை, குடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அவர்களே சொந்தமாக எடுத்து வருவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக செலுத்த வேண்டிய வைப்புத் தொகை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 36 கோடி இஸ்லாமியர்கள் பயனடைவார்கள். ஆன்லைன் மூலம் இனி அனைவரும் எளிதாக விண்ணப்பிக்கலாம். பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு கூடுதல் வசதி செய்து தர முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. இஸ்லாமியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் அனைத்து வசதிகளையும் செய்து தந்த பிரதமர் மோடிக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பில் மனமார்ந்த நன்றிகளை வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.