சென்னை: நாடாளுமன்ற தேர்தல் அறிவித்தவுடன், தேமுதிக கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என பிரேமலதா கூறியுள்ளார். தேமுதிக கொடி நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னை, கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகம், சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பங்கேற்று தேமுதிக கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு சேலை மற்றும் இனிப்பு வழங்கினார்.
தொடர்ந்து பிரேமலதா அளித்த பேட்டி: ஈரோடு இடைத்தேர்தலில், தேமுதிக வெற்றி பெறும். ஈரோடு மாவட்டத்தில் விஜயகாந்த் எண்ணற்ற நலத்திட்ட உதவிகளையும், இலவச மருத்துவ முகாம்களையும் அரசியல்வாதி ஆவதற்கு முன்பில் இருந்து, நடிகராக இருந்த போதே செய்து வருகிறார். நிச்சயம் ஈரோடு இடைத்தேர்தலில் தேமுதிக வெற்றி பெறும். 2024 நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவிற்கான தேர்தல். அப்போது யாருடன் கூட்டணி என்று பேசலாம். ஈரோடு இடைத்தேர்தல் என்பது நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாக தான் பார்க்கப்படுகிறது கலங்கிய குட்டையில் நாங்கள் மீன் பிடிக்கவில்லை. அதனால்தான் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம்.