சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான இணைய தளம் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. நடப்பு 2022-23ம் கல்வி ஆண்டு முதல் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை பெற்ற மாணவர்களே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் ஆதார் எண், அதனுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண், வங்கி கணக்கு எண், இணைய வழியில் பெறப்பட்ட வருவாய் சான்று மற்றும் சாதிச் சான்று உள்ளிட்ட பிற ஆவணங்களுடன் https://tnadtwscholarship.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், மாணவர்கள் சிரமமின்றி இந்த இணைய தளத்தில் விண்ணப்பிக்க வசதியாக மாணவர்கள் கல்விகற்கும் கல்லூரிகள் மூலம் கல்லூரியின் பற்று அலுவலர் முன்னிலையில் விண்ணப்பிக்கவும் வசதி செய்யப்
பட்டுள்ளது. மேலும், இது குறித்து விவரங்கள் அறிய விண்ணப்பம் பதிவிடும் நடைமுறை குறித்த குறும்படம் மற்றும் மாவட்ட அளவில் உதவி பெற அணுக வேண்டிய அலுவலர்கள் குறித்த விவரங்கள் இந்த கல்வி உதவித் தொகை இணைய தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்க போதுமான கால அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதனால் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
