பல்லாவரம்: மாங்காடு அருகே கல்குவாரிகுட்டையில் குதித்து மாயமான இளைஞர் 3 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார். மாங்காடு அடுத்த சிவன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (எ) விஜயகுமார்(34). இவர், கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிக்கு சுற்றிப் பார்க்க வந்தார். பின்னர், மோட்டார் சைக்கிளை கல்குவாரியின் கரையோரம் நிறுத்திவிட்டு கல்குவாரியில் இருந்த குட்டையில் குளித்தார். பின்னர், நீரில் மூழ்கி மாயமானார். இதையடுத்து, கடந்த 3 நாட்களாக மதுரவாயல் தீயணைப்பு வீரர்களும், அரக்கோணத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் ரப்பர் படகுகள் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர் வைத்து, நவீன உபகரணங்களுடன் நீரில் மூழ்கி மாயமான விஜயகுமாரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், 3 நாட்களுக்கு பிறகு நேற்று நீரில் மூழ்கிய விஜயகுமார் சடலமாக மீட்கப்பட்டார். அழுகிய நிலையில் இருந்த அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்த விஜயகுமார் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.