×

சசிகலா புஷ்பா கணவர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு

இளையான்குடி: இளையான்குடி அருகே சசிகலா புஷ்பா கணவர் வீட்டில் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே வடக்கு விசவனூரைச் சேர்ந்தவர் ராமசாமி (52). ஆர்எஸ்எஸ் மத்திய குழு உறுப்பினராக உள்ளார். ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு நேற்று முன்தினம் இரவு வடக்கு விசவனூருக்கு வந்து வீட்டில் தங்கியுள்ளார். நேற்று காலை எழுந்து பார்த்த போது வீட்டின் வெளி கேட் பகுதியில் கருமருந்துடன் சணல் சுற்றிய நிலையில் மூன்று நாட்டு வெடிகுண்டுகள் கிடந்தது. மேலும் கேட்டின் மீது கருப்பு பெயின்ட் வீசப்பட்டிருந்தது. புகாரின் பேரில் சாலைக்கிராமம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, வீட்டில் மற்ற இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இயங்கி வரும் நிலையில், வெடிகுண்டுகள் கிடந்ததாகக் கூறப்படும் மெயின் கேட் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மட்டும் இயங்காமல் இருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தடயவியல் நிபுணர்கள் நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றி பரிசோதனை செய்தனர். இந்த சம்பவம் சதிச்செயலா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என சிவகங்கை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜ பிரமுகரான முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா டெல்லியில் இருந்தபோது, ஆர்எஸ்எஸ் நிர்வாகி ராமசாமி பல சமயங்களில் உதவி செய்துள்ளார். அதனால் ராமசாமிக்கும், சசிகலா புஷ்பாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. 2 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் இருவருக்கும் திருமணம் நடந்தது. கடந்த சில மாதங்களாக இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாகவும், விவாகரத்து தொடர்பான வழக்கு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் சசிகலா புஷ்பா தரப்பு மீதும் போலீசாரின் சந்தேக பார்வை விழுந்துள்ளது.

Tags : Sasikala Pushpa , Bomb blast at Sasikala Pushpa's husband's house
× RELATED பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள சசிகலா...