புதுச்சேரி: புதுவையில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு கனிமவள கொள்ளை நடக்கிறது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி: புதுச்சேரிக்கும் அதானிக்கும் கூட தொடர்பு இருக்கிறது. காரைக்கால் துறைமுக நிறுவனம் கடனாக வாங்கிய பணத்தை கட்டாதததால் ஏலத்துக்கு வந்தது. அதனை வாங்குவதற்கு அதானி முயற்சி செய்தார். அதானி நேரடியாக வாங்காமல், சக்திவேல் என்ற பினாமி மூலம் வாங்கியுள்ளார்.
அதன்பிறகு அதானி குடும்ப பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. எல்லா ஊழலும் முறைகேடுகளும் உச்சநீதிமன்ற விசாரணையில் வெளியே வரும். மோடியும், அதானியும் இனிமேல் தப்பிக்க முடியாது. புதுச்சேரியில் கலால்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை வருவாய்த்துறையில் ஊழல் நடக்கிறது. அமைச்சர்கள் பினாமி பெயரில் சொத்து வாங்கி ரியல் எஸ்டேட் செய்கிறார்கள். இந்த ஊழலும் வெளியே வரும். வருவாய்த்துறையில் தற்போது கோடிக்கணக்கில் ஊழல் நடக்கிறது. ரயில்வே பாதைக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி என்ற பெயரில் மணல் கொள்ளை நடக்கிறது. இதற்கான கமிஷன் காரைக்காலில் உள்ள ஒரே அமைச்சரின் குடும்பத்திற்கு நேரடியாக செல்கிறது. இதில் கண்டிப்பாக மாவட்ட ஆட்சியர் விரைவில் சிக்குவார். கோடிக்கணக்கான ரூபாய்க்கு கனிம வள கொள்ளை அமைச்சர் தலைமையில் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.