புதுடெல்லி: டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விமானத்தில் சென்னைக்கு வர இருந்த 3 பயணிகளிடம் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், அவர்களின் பையில், இந்திய அரசின் அசோக சக்கர சின்னம் பொறித்த ஆவணங்கள், இந்திய ரிசர்வ் வங்கியின் சின்னம், கவர்னர் சக்திகாந்த தாஸ் பெயர் பொறித்த ஆவணங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதுபற்றிய கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த அவர்கள், பாதுகாப்பு படை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் சிஐஎஸ்எப் அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.