சென்னை: தேமுதிக கொடி நாளை முன்னிட்டு ஏழை, எளிய மக்கள், மாணவர்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும் என்று தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில் கூறியிருப்பதாவது: தமிழக மக்களுக்காக உயர்ந்த எண்ணத்தோடு, லட்சியத்தோடு உருவாக்கப்பட்டது தேமுதிக கொடி என்றும், அந்த லட்சியத்தை அடைய நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக கட்சியின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும். அதேபோல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் அனைவரும் தேமுதிகவின் வெற்றிக்காக ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏழை, எளிய மக்களுக்கும், மாணவ, மாணவியர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து, நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் என்ற கட்சியின் கொள்கைப்படி, இந்த இனிய கொடி நாளை தேமுதிகவினர் தொண்டர்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடிட வேண்டும். லட்சக்கணக்கான உண்மை தொண்டர்கள் தங்கள் ரத்தத்தை வியர்வையாக சிந்தி, அரும்பாடு பட்டு, அயராது உழைத்து வளர்ந்தது இந்த தேமுதிக. அவர்களுக்கு இந்த கொடி நாளில் எனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.