சென்னை: தெற்காசிய பயண சுற்றுலா பொருட்காட்சியில் தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களின் சிறப்புகள் குறித்த அரங்கம் அதிகப்படியான பார்வையாளர்களை ஈர்த்ததாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 30வது தெற்கு ஆசிய பயண சுற்றுலா பொருட்காட்சி, டெல்லி கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்திய பொருட்காட்சி திடலில் பிப்.9ம் தேதி முதல் பிப்.11ம் தேதி வரை 3 நாட்கள் நடந்தது. இந்த பொருட்காட்சியில் இந்தியா, ரஷ்யா, ஹாங்காங், துபாய், பூடான், ஓமன், தாய்லாந்து, மாலத்தீவுகள், மலேசியா, கத்தார் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மற்றும் இந்தியாவின் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசு சுற்றுலாத்துறை அரங்கங்கள், விமான போக்குவரத்து, சாலைப்போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள், பயண ஏற்பாட்டாளர்கள் அரங்குகளை அமைத்தனர்.
இதில் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அரங்கமும் அமைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அரங்கத்தில், சுற்றுலாத்துறையின் சுற்றுலா ஏற்பாடு, பயண ஏற்பாடு, விருந்தோம்பல், படகு சவாரி என அனைத்து அம்சங்களிலும் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் சென்னை, மதுரை, பாண்டிச்சேரி, திருச்சி, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பயண ஏற்பாட்டாளர்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், விருந்தோம்பல் துறையில் சிறந்து விளங்கும் 27 நிறுவனத்தினர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை அரங்கத்திற்கு வருகை தந்த பார்வையாளர்களிடம் தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களின் சிறப்புகள் குறித்து சுற்றுலாத்துறை இயக்குர் சந்தீப் நந்தூரி மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்கள் மற்றும் தனியார் சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள் விளக்கமளித்து, தமிழ்நாட்டில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்தனர்.