×

சென்னை புறநகர் பகுதிகளில் தலை தூக்கும் விபச்சாரம்: வெளிப்படையாகவே ஆன்லைன் மூலம் இளைஞர்களுக்கு வலைவிரிக்கும் அதிர வைக்கும் தகவல்

பல்லாவரம்: சென்னை புறநகர் பகுதிகளில் வெளிப்படையாகவே விபச்சாரம் தலை தூக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் இளைஞர்களுக்கு வலைவிரிக்கும் கும்பலை போலீசார் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம், பம்மல் பகுதிகளில் சமீபகாலமாக விபச்சார தொழில் கொடிகட்டி பறந்து வருகிறது. முன்பெல்லாம் விபச்சார தொழிலில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கென தனியாக புரோக்கர்களை வைத்திருப்பர். அந்த புரோக்கர்கள் தான் நேரடியாக சென்று, ஆசை வார்த்தை கூறி பார்ட்டிகளை அழைத்து வருவர். ஆனால் தற்போதோ விபச்சார தொழிலில் ஈடுபடுபவர்கள், தங்களுக்கென்று புரோக்கர்கள் யாரையும் வைத்துக் கொள்ளாமல், ஆன்லைன் மூலம் தங்களது செல்போன் எண் மற்றும் லோக்கேஷனை வெளிப்படையாக தெரியப்படுத்தி, இளைஞர்களுக்கு வலைவிரித்து வருகின்றனர்.

இதில், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை என்று 1500 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா என எந்த மாநில பெண்கள் வேண்டுமானாலும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். அதற்கேற்ப விலையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். மேலும், டோர் ஸ்டெப் சர்வீஸ் உண்டு. வாடிக்கையாளர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று பகிரங்கமாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் அழகிய பெண்களின் புகைப்படம் என்று சில புகைப்படங்களையும் முகப்பில் தெரியும் படியாக வைத்துள்ளனர்.

முன்பெல்லாம் சமூகத்திற்கு பயந்து இலை மறை காயாக இருந்து வந்த விபச்சாரம், தற்போது தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள அபார வளர்ச்சி காரணமாக, பகிரங்கமாக ஆன்லைனில் விளம்பர படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சபல புத்தியுடைய இளைஞர்கள் பலர், இதில் சிக்கி தங்களது பணத்தை மட்டுமல்ல வாழ்க்கையையும் தொலைத்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்களிடம் இருந்து எவ்வித புகாரும் வராததால், போலீசாரும் நடவடிக்கை எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
தற்போதைய நவீன உலகில் இளைஞர்களே செல்போன்களை அதிகமாக பயன்படுத்தி வருவதால், இது போன்ற மோசடி கும்பலின் குறிக்கோள், பள்ளி, கல்லூரி மாணவர்களைத்தான் வலையில் வீழ்த்துகிறார்கள். மேலும், இது போன்ற விபச்சார ஆன்லைன் என்ற பெயரில், ஆசை வார்த்தை கூறி சில கும்பல், இளைஞர்களிடம் பணமும் பறித்து வருகிறது. எனவே விபச்சார தடுப்பு பிரிவு போலீசார், இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி, அதிகரித்து வரும் இது போன்ற ஆன்லைன் விபச்சார மோசடி கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Prostitution Rampant in Chennai Suburbs: Shocking Information Revealed to Youth Online
× RELATED ஒசூர் அருகே 17 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மதபோதகர் கைது..!!