கரூர்: கரூர் மாவட்டம் பஞ்சமாதேவி பிரிவு அருகே புதர்மண்டிய நிலையில் உள்ள வாய்க்காலை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அமராவதி தடுப்பணை பகுதியில் இருந்து கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வாய்க்கால்கள் மூலம் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், இதே போன்ற வாய்க்கால் கரூர் மாவட்டம் பஞ்சமாதேவி பகுதியின் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு பாசனத்திற்காக சென்று வருகிறது. இந்த வாய்க்கால் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் அதிகளவு புதர் மண்டியுள்ளது.
இதனால், தண்ணீரின் போக்கில் மாற்றம் ஏற்படவும் அதிகளவு வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. எனவே, இந்த பாசன வாய்க்காலில் படர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வாய்க்கால் பகுதியை பார்வையிட்டு, படர்ந்துள்ள செடி கொடிகளை விரைந்து அகற்றிட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.