சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் கூறியதாவது: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 14ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு (இன்றும், நாளையும்) ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது. அதிகபட்சமாக ஈரோட்டில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. குறைந்தபட்சமாக நாமக்கல்லில் 15 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. கரூர், ராமநாதபுரம், நீலகிரி மாவட்டங்களில் இயல்பை விட 1.6 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.